ஸப்த கன்னியர்
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே……. சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான தகவல்கள்.
ப்ராம்மி,மகேஸ்வரி,கவுமாரி,வைஷ்ணவி,வராஹி,இந்திராணி,சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.
1. ப்ராம்மி
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள். மான் தோலை தன் மீது அணிந்திருப்பவள். ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.
இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
| இதையும் படியுங்கள்: |
|---|
| மக்களைக் காக்கும் சிவந்தியப்பர் திருக்கோவில் |
பிராம்மியின் காயத்ரி மந்திரம் :
“ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.”
2.மகேஸ்வரி
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?
வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள். இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.
இவளது காயத்ரி மந்திரம்
“ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.”
3.கெளமாரி
அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கெளமாரி. இவளுக்கு சஷ்டி,தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு.
மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. இவளை வழிபட்டால்,குழந்தைச் செல்வம் உண்டாகும். (குழந்தைச் செல்வத்திற்கு ஏங்குபவர்கள் கவனிக்கவும்)
| இதையும் படியுங்கள்: |
|---|
| மனநோயை குணமாக்கும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் |
கெளமாரியின் காயத்ரி மந்திரம்:
“ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.”
4.வைஷ்ணவி
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்:
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.”
5.இந்திராணி
அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும்,அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும்,மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால்,அவர்களுக்கு மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால்,மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
| இதையும் படியுங்கள்: |
|---|
| திருநீறு பூசுவதால் என்ன நன்மை? திருநீறை எப்படி பூச வேண்டும் ? |
இந்திராணியின் காயத்ரி மந்திரம்:
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத் “
சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான தகவல்கள்.
6.வராஹி
அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும்,ஓய்வுதருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்,இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.
வராஹியின் காயத்ரி மந்திரம்:
“ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் “
7.சாமுண்டி
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறுகைகள்,பதினாறு விதமான ஆயுதங்கள்,மூன்றுகண்கள்,செந்நிறம்,யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே!சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள்.
(மாந்திரீகத்தில்)இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது,இவளை அழைத்தால்,புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
| இதையும் படியுங்கள்: |
|---|
| குலதெய்வ சாபம் யாருக்கு வரும் தெரியுமா? |
சாமுண்டி காயத்ரி மந்திரம்:
“ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத் “
நிறைய அன்பர்கள் குலதெய்வமே தெரியவில்லை என வருத்தப்படுகிறார்கள்.அவர்கள் அனைவரும் மாற்றாக சப்தகன்னியர்களை வணங்கி குலதெய்வ அனுக்கிரகம் பெறலாம்.